இஸ்தான்புல், பிப். 13 - நிதியுதவியை நிறுத்தப் போவதாக அதிபர்
டோனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அச்சுறுத்திய
போதிலும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் தாங்கள்
தொடுத்துள்ள இனப்படுகொலை வழக்கை மீட்டுக்கொள்ளப் போவதில்லை
என்று தென்னாப்பிரிக்கா உறுதிபடக் கூறியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த
வழக்கை தென்னாப்பிரிக்கா மீட்டுக் கொள்வதற்கான எந்த சாத்தியமும்
இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரோனால்ட் ராமோலா
பைனாசியல் டைம்ஸ் சஞ்சிகையிடம் கூறினார்.
கொள்கையில் உறுதியாக இருப்பது சில நேரங்களில் கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும் இந்த விவகாரம் உலக
நலனுக்கும் சட்ட இறையாண்மைக்கும் முக்கியமானது என்பதால் எங்கள்
முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
காஸாவில் நடத்திய இனப்படுகொலைக்காக இஸ்ரேலை அனைத்துலக
நீதிமன்றத்தின் முன் நிறுத்திய முதல் நாடாக தென்னாப்பிரிக்கா
விளங்குகிறது. இப்போரில் 48,000 பேர் பலியானதோடு அந்த பிராந்தியம்
முழுவதும் தரைமட்டமானது. அங்கு கடந்த மாதம் 19ஆம் தேதி
அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது.
வெள்ளையர்களை குறி வைத்து அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நில
அபகரிப்புச் சட்டத்தை ஆட்சேபிக்கும் வகையிலும் இஸ்ரேலுக்கு எதிராக
அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை கண்டிக்கும்
வகையிலும் தென்னாப்பிரிக்காவுக்கான நிதியுதவியை நிறுத்தும்
பிரத்தியேக ஆணையில் டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.
மேலும், வர்த்தக, இராணுவ மற்றும் அணுவாயுத உருவாக்கத்தில்
ஈரானுடன் தென்னாப்பிரிக்கா இணைந்து செயல்படுவதாக அமெரிக்கா
குற்றஞ்சாட்டியுள்ளது.


