ஷா ஆலம், பிப். 12- இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கும்
மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பது மற்றும்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை ஸ்ரீ
கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கவுள்ளார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் (டிஎம்எஸ்2025) இயக்க பிரசார
நடவடிக்கையில் பகுதி நேர பொருளாதார பங்கேற்பாளர்களையும்
இணைத்துக கொள்வதற்கான பரிந்துரைகளையும் தாம்
முன்வைக்கவுள்ளதாக வோங் சியு கீ கூறினார்.
டிஎம்எஸ்2025 திட்டத்திற்கு 80 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணிகள் பகுதி நேர பொருளாதார
பங்களிப்பின் வாயிலாக சிலாங்கூர் சுற்றுலா பொருள்களை வாங்க
வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என அவர் சொன்னார்.
இது தவிர, பகுதி நேர பொருளாதாரத்தில் தொழில்முனைவோரின்
பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும்
முயற்சிகள் குறித்தும் தாம் சட்டமன்றக் கூட்டத்தில்
கேள்வியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வட்டார மக்களின் வசதிக்காக ஜாலான் பெசாரில் சமூக மண்டபம்
மற்றும் பாலாய் ராயா நிர்மாணிப்பது தொடர்பான பரிந்துரையையும் தாம்
மாநில சட்டமன்றதில முன்வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இம்மாதம் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்ட விவாதங்களில்
அடிப்படை வசதிகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய
இடத்தைப் பெறும் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான்
முன்னதாக கூறியிருந்தார்.
மக்கள் நலன் சார்ந்த இவ்விரு திட்டங்களும் அடையாளம் காணப்பட்டு
விரைந்து தீர்வு காணப்படுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.








