குவாந்தான், பிப். 12- முதலீடு மற்றும் இணைய முதலீட்டுத் திட்ட
மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி இரு பெண்கள் 565,200 வெள்ளியைப்
பறிகொடுத்தனர்.
முதல் சம்பவத்தில் 44 வயது மருத்துவர் ஒருவர் 433,700 வெள்ளியைப்
மோசடிக் கும்பலிடம் பறிகொடுத்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர்
டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் டெலிகிராம் செயலியில் வெளியான
பிக்காட்யின் முதலீடு தொடர்பான விளம்பரத்தால் கவரப்பட்ட அந்த
மருத்துவர் அதில் முதலீடு செய்ய முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
அந்த டெலிகிராம் செயலியில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு ஏற்பட
அதிலிருந்து இணைப்பை அந்த மருத்துவர் அழுத்தி வாட்ஸ்ஆப்
முதலீட்டுக் குழுவில் இணைந்துள்ளார். வெ.500 முதல் வெ.5,000 வரை
முதலீட்டு வாய்ப்பினை வழங்கும் பல தொகுப்புகளில் பங்கேற்பதற்கான
வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மணி நேரத்தில் 15,000 வெள்ளி வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய
500 வெள்ளி அடிப்படை முதலீட்டுத் திட்டத்தில் அவர் இணைந்துள்ளார்.
இந்த முதலீட்டுக் காலத்தில் அவர் 433,700 வெள்ளி தொகையை 16
வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 22 முறை மாற்றியுள்ளார் என
யாஹ்யா கூறினார்.
எனினும், வாக்குறுதியளித்தபடி லாபத் தொகை எதுவும் கிடைக்காததைத்
தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மருத்துவர் இதன்
தொடர்பில் காவல் துறையில் புகார் அளித்தார் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, இரண்டாவது சம்பவத்தில் தொனாகா நேஷனல் அதிகாரி
எனக் கூறிக் கொண்ட நபரிடம் 61 வயது மாது ஒருவர் 131,500
வெள்ளியைப் பறிகொடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் வீட்டில் மின்சாரத்தை திருடியதோடு சட்டவிரோத
பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டிய அந்த மோசடிப்
பேர்வழி, பின்னர் தொலைபேசி இணைப்பை இன்ஸ்பெக்டர் என
கூறிக்கொண்ட ஆடவரிடம் மாற்றியுள்ளார்.
அந்த இன்ஸ்பெக்டரின் உத்தரவை ஏற்று சொந்த சேமிப்பு மற்றும் ஊழியர்
சேம நிதி வாரிய கணக்கிலிருந்த தொகை உள்பட மொத்தம் 131,500
வெள்ளியை 21 பரிவர்த்தனைகைள் மூலம் மோடிக்கும்பலின் கணக்கிற்கு
மாற்றியுள்ளார் என்றார் அவர்.


