கோம்பாக், பிப். 11- பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் வளாகத்தில் மந்திரி புசார் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான தைப்பூச விழாவில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த இவ்விழாவில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் கலந்து கொண்டது இந்நிகழ்வுக்கு மெருகூட்டும் வகையில் இருந்தது.
வேண்டுதல்களை நிறைவேற்றிய இறைவனுக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் இல்லிழாவின் மகத்துவம் அவர்களைப் பெரிதும் ஈர்த்தது.
கூட்ட நெரிசல் காரணமாக சிலர் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருந்தாலும் வண்ணமயமான ஆடைகளில் வந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் கலாச்சார நிகழ்வை ரசிப்பதில் பெருமிதம் கொண்டனர்.
நேற்று மாலை தொடங்கி நடைபெற்ற மாநில அரசின் தைப்பூச நிகழ்வில் முத்தாய்ப்பு அங்கமாக கோம்பாக், உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள 61 கோயில்களுக்கு 561,000 வெள்ளி மானியமாக வழங்கப்பட்டது. இந்த நிதி வழங்கும் நிகழ்வுக்கு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமிருடின் ஷாரியுடன் பத்துமலைத் திருத்தலத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை மேற்கொண்டனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் பல்நோக்கு மண்டபம் கட்டுவது மற்றும் மின்படிகட்டுகள் அமைப்பது உள்பட பத்து மலையின் மேம்பாட்டிற்கு நிதியுதவியையும் அறிவித்தனர்.
மாநில அரசு கட்டுமான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குவதோடு மேம்பாடு தொடர்பான நில அந்தஸ்து மற்றும் தொழில்நுட்ப விவகாரத்தையும் தீர்க்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தைப்பூச கொண்டாட்டத்தின் போது நிலைமையைக் கட்டுப்படுத்த பத்துமலை வளாகத்தில் 1,500 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை பணியில் அமர்த்தும் சிலாங்கூர் காவல்
துறையின் நடவடிக்கையையும் அவர் பாராட்டினார்.








