புத்ராஜெயா, பிப் 11- ஏழு வயதுச் சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி
மாண்டார். இச்சம்பவம் பூச்சோங், ஜாலான் புத்ரா பிரிமா உத்தாமா, தாசேக்
ரெஸிடென்சியில் உள்ள பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் நேற்று
முன்தினம் நிகழ்ந்தது.
அச்சிறுவன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் காலை 11.30 மணியளவில்
பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய அந்த நீச்சல் குளத்திற்குச் சென்றதாக
சந்தேகிக்கப்படுகிறது என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
நோர்ஹிஷாம் பஹாமான் கூறினார்.
பகாங் மாநிலத்தைச் சேர்ந்த அச்சிறுவனின் பெற்றோர் விடுமுறையைக்
கழிப்பதற்காக அந்த குடியிருப்பில் உள்ள உறவினர் இல்லத்திற்கு வந்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.
ஜாலான் புத்ரா பிரிமா உத்தாமா தாசேக் ரெஸிடென்சியில் உள்ள அந்த
நீச்சல் குளத்தில் அக்குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்த வேளையில்
யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள பெரியவர்களுக்கான நீச்சல்
குளத்திற்குச் சென்ற அச்சிறுவன் குளிக்கும் போது நீரில் மூழ்கி
இறந்துள்ளான் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா
மருத்துவமனையிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 2.40 மணியளவில்
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் புகாரைப் பெற்றதாக அவர்
கூறினார்.
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு முன்னரே அச்சிறுவன்
உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அச்சிறுவன் நீரில் மூழ்கி
இறந்தது சவப்பரிசோதனையில் தெரியவந்தது என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது
பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.








