ஷா ஆலம், பிப். 9- தாமான் தாசேக் ஸ்ரீ செர்டாங்கில் நடைபெற்ற சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வாகன பயன்பாடு இல்லா தின நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட சுபாங் ஜெயா வட்டார மக்கள் கலந்து கொண்டனர்.
மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தின் (யு.பி.எம்.) ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ஆண்டின் இந்த முதல் நிகழ்வு உற்சாகமூட்டும் வகையில் இருந்ததாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தனது முகநூலில் தெரிவித்தது.
தாமான் தாசேக் செர்டாங்கில் நடைபெற்ற 2025 வாகன பயன்பாடு இல்லா தினத்தை த உற்சாகப்படுத்த 1,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் வந்தனர். எம்.பி.எஸ்.ஜே. மற்றும் யு.பி.எம். ஒத்துழைப்புடனான இந்த நிகழ்வு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக விளங்கியது என்று அது குறிப்பிட்டது.
இந்த ஒத்துழைப்பு தாசேக் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள சுவரோவியக் கலையையும் உட்படுத்தி அந்தப் பகுதியின் அழகை மேலும் மெருகூட்டி சுற்றுப்புற சூழ்நிலையை பிரகாசமாக்கியது.
காலை உணவு விருந்து, இலவச சுகாதார பரிசோதனை, சுற்றுச்சூழல் சந்தை, பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் டிங்கி பரவலை கண்டுபிடித்து ஒழித்தல் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








