ஷா ஆலம், பிப். 1- சீனப்புத்தாண்டை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட மெகா ரஹ்மா ஏஹ்சான் மலிவு விற்பனையின் வாயிலாக 22,000 பேர் வரை பயனடைந்தனர். இந்த விற்பனையின் மூலம் சந்தையை விட 40 விழுக்காடு வரை குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை அவர்கள் பெற்றனர்.
இந்த சீனப்புத்தாண்டு மெகா மலிவு விற்பனை கடந்த மாதம் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 14 இடங்களில் நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமது கைரில் முகமது கூறினார்.
இது தவிர, ஏஹ்சான் மார்ட் கடைகளில் நடத்தப்பட்ட மலிவு விற்பனையின் வழி 350,000 வெள்ளி ஒட்டுமொத்த வருமானம் பெறப்பட்டது என்று அவர் சொன்னார்.
பெருநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஏற்படும் நிதிச்சுமையை இந்த மலிவு விற்பனை பெரிதும் குறைக்க உதவும் காரணத்தால் பெருநாளைக் கொண்டாடும் மக்கள் இந்த மலிவு விற்பனையை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு பெரிதும் வரவேற்கத்தக்க வகையில் உள்ளதோடு வாடிக்கையாளர்களிடமிருந்து தாங்கள் நேர்மறையான கருத்துகளைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வரும் மார்ச் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மலிவு விற்பனை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), பீகூன் (வெ.2.50), சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது








