ஷா ஆலம், ஜன. 30- தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி வெள்ளியை இவ்வாண்டு வழங்க ஹிஜ்ரா அறவாரியம் (ஹிஜ்ரா சிலாங்கூர்) திட்டமிட்டுள்ளது.
மாநில மக்கள் பயன்பெறக்கூடிய இந்த இந்த மூலதன உதவியின் மூலம் ஆயிரக்கணக்கான வணிகர்கள் பயன் பெற முடியும் என்று அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மேரியா ஹம்சா கூறினார்.
அதோடு மட்டுமின்றி பெண்கள் குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட உதவும் ஸ்கிம் நியாகா டாருள் ஏஹ்சான் (நாடி) திட்டத்தின் வாயிலாகவும் ஹிஜ்ரா கடனுதவி வழங்கப்படும் வேளையில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 லட்சம் வெள்ளியின் வாயிலாக 500 பேர் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
தற்போது நடப்பிலுள்ள திட்டங்களான ஐ-பிஸ்னஸ் மற்றும் நாடி ஆகிய திட்டங்களுக்கு 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும். இது தவிர, தனிப்பட்ட தொழில்முனைவோர் மீதும் கவனம் செலுத்தப்படும். பெண் தொழில்முனைவோரின் ஆற்றலை மேம்படுத்துவதே எங்களின் பிரதான இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகத்தை சிறு அளவில் தொடங்க விரும்பும் அல்லது சுழல் மூலதனத்தை அதிகரிக்க விரும்பும் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான கடனுதவி ஐ-பிஸ்னஸ் மூலம் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 2,806 தொழில்முனைவோருக்கு 5 கோடியே 50 லட்சம் வெள்ளியை கடனுதவியாக ஹிஜ்ரா வழங்கியுள்ளது என்று ஹிஜ்ரா சிலாங்கூர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி கூறியிருந்தது.
மாநிலத்திலுள்ள தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் உதவுவதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மூலதன உதவி வழங்கப்படுவதாக அந்த அறவாரியம் தெரிவித்திருந்தது.








