(ஆர்.ராஜா)
பந்திங், ஜன. 22- சிலாங்கூர் மாநில அரசின் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் (ஐ-சீட்) 2025ஆம் ஆணடிற்கான வர்த்தக உபகரண விண்ணப்பங்கள் பிப்ரவரி மாதம் திறக்கப்படும்.
வரும் பிப்ரவரி மாத தொடக்கம் முதல் இறுதி வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஐ.சீட் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளியும் அனைத்து இன மக்களுக்கு இத்தகைய உதவிகளை வழங்கும் நோக்கிலான புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்திற்கு 20 லட்சம் வெள்ளியும் இவ்வாண்டு வழங்க மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடீன் ஷாரி உறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்தியர்கள் மத்தியில் வறுமையை ஒழிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் எனது காலத்திலும் தொடரும் என பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் உறுதியளித்தார்.
இங்குள்ள பந்திங் தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட நிலையிலான 2024ஆம் ஆண்டிற்கான ஐ-சீட் வர்த்தக உபகரண ஒப்படைப்பு நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெட்டாலிங், உலு சிலாங்கூர் மாற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வர்த்தக உபகரண ஒப்படைப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை எனக் கூறிய அவர், விரைவில் அந்நிநிகழ்வுகளை நடத்த தாங்கள் ஏற்பாடு செய்து வருவதாக க் குறிப்பிட்டார்.








