அம்பாங் ஜெயா, ஜன. 18- நேர்மறையான பொருளாதார வளர்ச்சி மற்றும் கடந்தாண்டு நாட்டிற்குள் நுழைந்த அதிகப்பட்ச முதலீடுகள் மாநிலம் 285 கோடியே 80 லட்சம் வெள்ளி வருமானத்தை ஈட்டுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது.
புதிய தொழில்பேட்டைகள், தொழிற்சாலைகள், தரவு மையம் மற்றும் அடைவு நிலை மையம் ஆகியவற்றின் உருவாக்கம் இந்த அதிகப்பட்ச வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கின என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலம் 2024 இறுதியில் 285 கோடியே 80 லட்சம் வெள்ளி வருமானத்தை ஈட்டியுள்ளது. மாநில வரலாற்றில் இதுவே அதிக வருமானமாகும். கடந்த 2017ஆம் ஆண்டு பெறப்பட்ட 281.1 கோடி வெள்ளி வருமானத்தை இது மிஞ்சி விட்டது என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு முழுவதும் நிர்வாகச் செலவினங்களுக்காக 98.07 விழுக்காட்டுத் தொகையும் மேம்பாட்டிற்கு 97.18 விழுக்காட்டுத் தொகையும் செலவிட்டுள்ளது என்று அம்பாங் ஜெயா மேம்பாட்டு பாராட்டு விருந்து நிகழ்வுக்கு வழங்கிய உரையில் அமிருடின் தெரிவித்தார். அவரது உரையை சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் வாசித்தார்.
மாநிலத்தின் இந்த அபரிமித வளர்ச்சிக்கு அரசு நிர்வாகத்திற்கு தனியார் துறைக்கும் இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான கொள்கைகள் முக்கிய காரணமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசுடன் இணக்கமான கருத்தைக் கொண்டிருக்கும் மேம்பாட்டாளர்கள் மற்றும் தனியார் துறையினருக்கும் மாநில மற்றும் வட்டார பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் ஊராட்சி மன்றங்களுக்கும் தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமிருடின் மேலும் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலம் கடந்த 2023ஆம் ஆண்டு 270 கோடி வெள்ளியையும் 2022ஆம் ஆண்டு 250 கோடி வெள்ளியையும் 2021ஆம் ஆண்டு 230 கோடி வெள்ளியையும் வருமானமாகப் பெற்றது.








