உலு லங்காட், ஜன. 13- பண்டார் பாரு பாங்கி, செக்சன் 15இல் உள்ள விளையாட்டுத் தொகுதியில் 26 லட்சம் வெள்ளி செலவில் செயற்கை புல் கால்பந்து திடலை காஜாங் நகராண்மைக் கழகம் அமைக்கிறது.
அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் (பீஃபா) நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் இந்த திடலின் நிர்மாணிப்பு பணி வரும் மே மாத இறுதியில் முற்றுப் பெறும் என்று காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நாஸ்லி முகமது தாயிப் கூறினார்.
இந்த திடல் பீஃபாவின் விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும் பட்சத்தில் வட்டார மக்களுக்கு பயன் தரும் அதே வேளையில் மாநில மற்றும் அனைத்துலக நிலையிலான குழுக்களும் இங்கு பயிற்சி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த திடலின் அமைப்பு முறை சற்று வேறுபாட்டுள்ளது. இது கால்பந்து விளையாட்டுத் திடலாக மட்டுமின்றி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்குரிய இடமாகவும் பயன்படுத்த முடியும் என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும் அதேவேளையில் நகராண்மைக் கழகத்தின் வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் மேலும் அதிகமான செயற்கைப் புல் திடல்களை அமைக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
செயற்கைப் புல் திடல்களை அமைப்பதற்கு தேவையான காலி இடங்கள் நமது பகுதியில் அதிகமாக உள்ளன. நகராண்மைக் கழகத்தின் வருமானத்தை ஈட்டித் தரும் நோக்கில் மேலும் பல இடங்களில் இத்தகைய செயற்கை புல் திடல்களை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
முன்னதாக அவர். பண்டார் பாரு பாங்கி, செக்சன் 15இல் உள்ள விளையாட்டுத் தொகுதியில் செயற்கைப் புல் திடல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடக்கி வைத்தார்.








