அபுடாபி, ஜன. 13- ஐக்கிய அரசு சிற்றரசுக்கு மூன்று நாள் பணி நிமித்தப்
பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
அபுடாபி வந்தடைந்தார். இங்கு நடைபெறம் அபுடாபி நிலைத்தன்மை
வாரம் நிகழ்வில் பங்கேற்பது மற்றும் பல்வேறு துறைகளில் இரு
நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது ஆகிய
நோக்கங்களின் அடிப்படையில் அவர் இந்த பயணத்தை
மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் பயணம் செய்த விமானம் உள்நாட்டு நேரப்படி இரவு 9.00 மணிக்கு
அபுடாபி விமான நிலையம் வந்த டைந்தது. பிரதமர் ஐக்கிய அரசு
சிற்றரசின் உள்துறை அமைச்சர் அலி அல் சயோக், மலேசிய உள்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஐக்கிய அரசு
சிற்றரசுக்கான மலேசிய அரச தந்திரி தெங்கு டத்தோ சிராஜூஸமான்
தெங்கு முகமது அரிபின் ஆகியோர் வரவேற்றனர்.
ஐக்கிய அரசு சிற்றரசின் துணை அதிபரும் பிரதமரும் துபாய்
ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷிட் அல் மொக்தாருமின்
அழைப்பின் பேரில் பிரதமர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமரின் இப்பயணக் குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ
சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், முதலீடு, வர்த்தகம் மற்றும்
தொழிலியல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ்,
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடீர் ஆகியோர்
இடம் பெற்றுள்ளனர்.
இரு வழி உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இரு தரப்பு நலன் சார்ந்த
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களின்
அடிப்படையில் ஐக்கிய அரபு சிற்றரசின் அதிபரும் அபுடாபி
ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ஸயட் அல் நஹ்யானை அபு
டாபியிலும் பிரதமர் எமிர ஷேக் முகமது பின் ரஷிட் அல் மொத்முமை
துபாயிலும் பிரதமர் அன்வார் சந்திப்பார்.
மேலும் மலேசியா-யு.ஏ.இ. இடையிலான விரிவான பொருளாதார
ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கையும் பிரதமர்
பார்வையிடுவார்.
பிரதமர் பதவியை ஏற்றப்பின்னர் அந்நாட்டிற்கு அன்வார் மேற்கொள்ளும்
இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் தனது முதல் பயணத்தை கடந்த
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொண்டார்.


