புத்ராஜெயா, ஜன. 8- இவ்வாண்டிற்கான நகர்ப்புற சமூக ஆக்கத் திறனளிப்புத் திட்ட (பி.இ.கே.பி.) அமலாக்கத்திற்கு ஒரு கோடியே 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 1,060 பங்கேற்பாளர்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி 40 பிரிவினர் பயன் பெறுவர் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு கூறினார்.
இந்த பி.இ.கே.பி. 2025 திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 29 அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த அமலாக்கப் பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டுள்ளதாகக் கூறிய அவர், சுயமாக தொழில் புரியும் அளவுக்கு பங்கேற்பாளர்களுக்கு தொழில் முனைவோரியல் பயிற்சியை வழங்கும் பொறுப்பினை அவர்கள் ஏற்பர் என்று தெரிவித்தார்.
இந்த பி.இ.கே.பி. திட்டத்தில் பங்கேற்பதற்கு 90க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் விண்ணப்பம் செய்திருந்தன. ஆனால் அவற்றில் 29 அமைப்புகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட அனைத்து அரசு சாரா அமைப்புகளும் வழங்கப்பட்ட இந்த ஆறு மாத பயிற்சி காலத்தில் பி.இ.கே.பி. பங்கேற்பாளர்களின் வருமானம் குறைந்தது 750 வெள்ளி வரை அதாவது பரம ஏழ்மைக்கான வருமான அளவான 747 வெள்ளியை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு 2025ஆம் ஆண்டிற்கான பி.இ.கே.பி. திட்ட அமலாக்கத்திற்கான அங்கீகாரக் கடிதம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்பு அஸாம் பண்டார் என அழைக்கப்பட்ட இந்த பி.இ.கே.பி. திட்டம் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சினால் கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டாகும்.
இந்த திட்டத்தின் கீழ் பங்கேற்பாளர்களுக்கு தொழிமுனைவோரியல் துறையில் ஒரு வார காலப் பயிற்சி வழங்கப்படுவதோடு அவர்கள் தேர்ந்தெடுத்த வர்த்தகத் துறைக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்படும்








