அலோர்ஸ்டார், ஜன. 8- டிரெய்லர் உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஆடவர் உயிரிழந்ததோடு அவரின் மனைவி காயங்களுக்குள்ளானார். இந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 37.5வது கிலோ மீட்டரில் ஜித்ரா, கம்போங் ஊத்தான் டோல் சாவடி அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் நேற்றிரவு 9.26 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவரும் தீயணைப்பு உதவி அதிகாரியுமான முகமது புஸ்தான் காருடின் கூறினார்.
சுமார் பதினைந்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் அவ்விபத்தில் ஒரு டிரெய்லர் லோரி, டோயோட்டா அவான்ஸா மற்றும் புரோட்டோன் சாகா ஆகிய வாகனங்கள் சம்பந்தப் பட்டுள்ளதைக் கண்டனர்.
இந்த விபத்தில் புரோட்டோன் சாகா காரின் ஓட்டுநரான 50 வயது மதிக்கத்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் ஏறக்குறைய அதே வயதுடைய மாது காயங்களுக்குள்ளானார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இறந்த ஆடவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வேளையில் காயமடைந்த மாது இங்குள்ள சுல்தானா பாஹ்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.


