பேங்காக், ஜன 7- அமெரிக்கா கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப் புயலை எதிர்கொண்டுள்ளது.
இந்த மிகப்பெரிய குளிர்கால புயலால் 7 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் பாதிப்படையக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
மத்திய அமெரிக்காவில் தொடங்கிய இப்பனிப்புயல் அடுத்த சில நாட்களில் கிழக்கை நோக்கி நகரும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.
அதோடு, இன்னும் மிக குறைந்த வெப்பநிலையை இப்புயல் கிழக்கு நோக்கி நகரும்போது அமெரிக்க மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா


