(ஆர்.ராஜா)
ஷா ஆலம், டிச. 31- கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாக, புக்கிட் கெமுனிங் சாலையில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கவலை தெரிவித்துள்ளார்.
இத்தகையக் குற்றங்களைப் புரிவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அதிகப் பட்ச அபராதமும் விதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
குடியிருப்புப் பகுதியில் தூய்மையைப் பராமரிப்பது நாம் அனைவரின் கடமையாக உள்ள வேளையில் சில பொறுப்பற்ற தரப்பினரின் இத்தகைய சட்டவிரோத செயல்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்விலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாக புக்கிட் கெமுனிங் சாலையில் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இத்தகைய பொறுப்பற்றத் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்றத்தை நாங்கள் பணித்துள்ளோம்.
அதே சமயம், அடிக்கடி குப்பைகள் கொட்டப்படும் இடங்களை கண்காணிக்கும் பணியில் மாநகர் மன்ற உறுப்பினர் அலுவலக தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இத்தகைய குற்றங்களைப் புரிவோரை விரைந்து பிடிப்பதற்காக சில தரப்பினரையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
ஆகவே, கண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படும் சம்பவங்களை முறியடிப்பதற்கு வட்டார மக்களின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. குப்பைகளை சாலையோரங்களில் கொட்டும் தரப்பினரைக் காணும் பட்சத்தில் அது குறித்து எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தகவல் கொடுப்போர் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படும் என்பதையும் உறுதியளிக்கிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் தூய்மையைப் பராமரிப்பதில் அனைத்து குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. நமது சுற்றுப்புறங்களை யாரும் மாசுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பிரகாஷ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








