முவான் (தென் கொரியா), டிச 29- தென் கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் 181 பேருடன் தரையிறங்கிய விமானம் நிறுத்தும் விசையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் இரு பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இன்று காலை 9.07 மணியளவில் அந்த ஜெஜு ஏர் விமானம் சியோலில் இருந்து தென்மேற்கே 288 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது. எனினும், அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் விமான நிலைய வேலியில் அது மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் இதுவரை 85 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விபத்தில் உயிர்தப்பிய இரு பெண்கள் அதாவது ஒரு பயணி மற்றும் ஒரு பணியாளர் தற்போது மோக்போவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேங்காக்கில் இருந்து வந்த அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உட்பட 181 பேர் இருந்தனர்,
விமானம் தரையிறங்கும் கியர் இல்லாமல் தரையிறங்க முயற்சிக்கும் காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது.
விமானம் தரையில் சறுக்கிச் சென்று கான்கிரீட் சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்தது. வெடிப்புச் சம்பவம் காரணமாக அந்த விமானம் கிட்டத்தட்ட முற்றாக அழிந்தது.








