(ஆர்.ராஜா)
ஷா ஆலம், டிச. 29- அடுத்தாண்டு முதலாம் வகுப்பில் சேரவுள்ள கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 1,120 மாணவர்களுக்கு தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் அறநிதித் திட்டத்தின் (தாவாஸ்) கீழ் பள்ளி உபகரணங்கள் வழங்கப் பட்டன.
இங்குள்ள கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இந்த பள்ளி உபகரணப் பொருள்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் தாவாஸ் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
அடுத்தாண்டில் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் 2018ஆம் ஆண்டு பிறந்த சிறார்களுக்கு இந்த பள்ளி உபகரண உதவி வழங்கப் படுவதாக பிரகாஷ் தெரிவித்தார்.
பள்ளி புத்தகப் பைகள் மற்றும் எழுது பொருள்கள் அடங்கிய இந்த உதவி புதிய தவணையில் பள்ளியில் காலடி வைக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கும் எனத் தாம் நம்புவதாக பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் வசதி குறைந்த பெற்றோர்கள் குறிப்பாக அதிக பிள்ளைகளைக் கொண்டவர்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைப்பதையும் இந்த தாவாஸ் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மாநில மக்ளின் நலனில் அரசு எப்போதும் பரிவு கொண்டுள்ளது. அனைத்துத் தரப்பையும் சேர்ந்த மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உதவிகளை வழங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
.இந்த திட்டத்தின் கீழ் வரும் 2025ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் நுழையவிருக்கும் 2018 ஆம் ஆண்டு பிறந்த 29,105 தாவாஸ் உறுப்பினர்கள் இந்த பள்ளி உபகரண உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.
இம்மாணவர்களுக்கு புத்தகப் பை, எழுது பொருள்கள், குடிநீர் போத்தல், உணவும் கலன் உள்ளிட்டப் பொருள்கள் வழங்கப்படும்.
மாநிலத்தில் பக்கத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அமல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக இந்த தாவாஸ் திட்டம் விளங்குகிறது. சிலாங்கூரில் பிறந்த, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மற்றும் பிறந்து மூன்றாண்டுகளுக்குள் பதிவு செய்த குழந்தைகள் 18 வயதை அடையும் போது 1,500 வெள்ளியை பெற இத்திட்டம் வகை செய்கிறது.







