(ஆர்.ராஜா)
கிள்ளான் டிச. 28- செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ்
அவர்களின் பெரும் முயற்சியால் இங்குள்ள தாமான் செந்தோசா ஸ்ரீ ராஜ
ராஜேஸ்வரி ஆலயத்தில் மண்டபம் கட்டுவதற்கு நிலம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
ஆலயத்தின் பின்புறம் உள்ள 4,170 சதுர மீட்டர் நிலத்தை ஆலய
நிர்வாகத்திடம் வழங்குவதற்கு கிள்ளான் அரச மாநகர் மன்றம் ஒப்புதல்
அளித்துள்ளது.
இந்த நிலம் கிடைக்கப்பெற்றதன் வழி ஆலய வளாகத்தில் மண்டபம்
கட்டுவதற்கு நிலம் கோரி ஆலய நிர்வாகத்தினர் கடந்த 20 ஆண்டுளாக
நடத்தி வந்த போராட்டத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆலயத்திற்கான நிலம் தவிர்த்து செந்தோசாவில் உள்ள அல்-பராக்கா
பள்ளிவாசலை தனித்துவம் வாய்ந்த வடிவமைப்புடன் உருவாக்குவதற்கும்
சுற்றுப்பயணிகளின் ஈர்ப்பு மையமாக விளங்கி வரும் சீன ஆமை
கோயிலை சுற்றுலா மையமாக பிரபலப்படுத்துவதற்கும் டாக்டர் குணராஜ்
அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் டாக்டர் குணராஜ் தலைமையில் நடைபெற்ற சந்திப்புக்
கூட்டம் ஒன்றில் இந்த மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கும் நில
அங்கீகாரம் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனிடையே, மண்டபம் நிர்மாணிப்பதற்கு நிலம் கோரி பல ஆண்டுகளாக
நடத்தி வந்த போராட்டத்திற்கு வெற்றிகரமாக தீர்வு கண்ட சட்டமன்ற
உறுப்பினர் குணராஜ் அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பாக தாங்கள்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத் தலைவர்
சந்திரசேகரன் சுப்ராயன் கூறினார்.
முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் வசிக்கும் இந்த
தாமான் செந்தோசா பகுதியில் பிரதான வழிபாட்டுத் தலமாக விளங்கி
வரும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக
மண்டபம் கட்டும் பொருட்டு தாங்கள் அரசாங்கத்திடம் நீண்ட காலமாக
மனு செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தற்போது
ஆலயத்தில் திருப்பணி நடைபெற்று வருவதால் மண்டபம் நிர்மாணிப்பது
தொடர்பான முயற்சிகள் கும்பாபிஷேகத்திற்குப் பின்னரே
முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.








