புத்ராஜெயா, டிச. 28- இம்மாதம் 15 முதல் 21 வரையிலான 51வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 1,407ஆக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 1,384ஆக மட்டுமே இருந்த து என்பது குறிப்பிடதக்கது.
நாட்டில் நடப்பு டிங்கி நிலவரங்கள் குறித்து விவரித்த சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான், இக்காலக்கட்டத்தில் இந்நோய் தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் பதிவானதாக க் குறிப்பிட்டார்.
கடந்த 51 வார காலத்தில் நாட்டில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 121,082 பேராக உயர்வு கண்டதாக கூறிய அவர், கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 120,418 பேர் மட்டுமே இந்நோயினால் பாதிக்கப்பட்டனர் என்றார்.
டிங்கி காய்ச்சல் காரணமாக கடந்தாண்டின் 51 வார காலத்தில் 96 பேர் மரணமடைந்த வேளையில் இவ்வாண்டு இதுவரை 116 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
கடந்த 50வது நோய்த் தொற்று வாரத்தில் 27ஆக இருந்த நோய்ப் பரவல் இடங்களின் எண்ணிக்கை 51வது வாரத்தில் 18ஆக குறைந்துள்ளது என டாக்டர் முகமது ராட்ஸி குறிப்பிட்டார்.
அந்த 18 நோய்ப் பரவல் இடங்களில் தலா நான்கு சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலும் தலா மூன்று கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ரா ஜெயாவிலும் தலா ஒரு இடம் பகாங் மற்றும் பினாங்கிலும் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.
பொது விடுமுறையின் காரணமாக மக்களின் பயண நடவடிக்கைள் அதிகரித்த காரணத்தால் இந்நோய் எளிதில் பரவுவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தங்களின் சுற்றுப்புறங்கள் ஏடிஸ் கொசுக்கள் பரவும் சாத்தியத்திலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்யும்படி பொது மக்களை கேட்டுக் கொண்டார்.








