ஷா ஆலம், டிச. 28- தெராத்தாய் சட்டமன்றத் தொகுதியில் 618,000 வெள்ளி செலவில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகளை செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மாரிஸ் எனப்படும் மலேசியா சாலை தகவல் தரவு முறையின் கீழ் இந்த சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் இயோ ஜியா ஹார் கூறினார்.
இந்த சாலை சீரமைப்புப் பணி கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். ஜாலான் பாண்டான் பெர்டானாவில் சாலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீர் செய்யும் பணியில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஈடுபடும் என அவர் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இந்த பணிகள் முற்றுப் பெற்று விடும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்பாகவும் இப்பணிகள் நிறைவு பெறுவதற்கான சாத்தியம் உள்ளது என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் குறிப்பிட்டார்.
வாகனமோட்டிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்குரிய வகையில் சாலைகள் தரமுடன் இருப்பதை உறுதி செய்ய 5 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் மாபெரும் சாலை சீரமைப்புத் திட்டத்தை மாநில அரசு அமல் செய்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.
டிவிட்டர் அல்லது இன்ஃப்ராசெல் செயலி வாயிலாக பெறப்பட்ட அதிகமான புகார்களின் அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாலைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.








