ஷா ஆலம், டிச. 25- சிலாங்கூர் 2025 ஆம் ஆண்டை நோக்கி பயணிக்கும் வேளையில் இவ்வாண்டில் கண்ட வளர்ச்சி மற்றும் அடைந்த சாதனைகளை தக்க வைத்துக் கொள்ள்ளவும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சிலாங்கூர் பதிவு செய்த அந்நிய முதலீடுகளின் அளவு கணிசமாக உயர்ந்து 6,680 கோடி வெள்ளியாகப் பதிவாகியுள்ளதாக இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 2,530 கோடி வெள்ளி அதிகமாகும் என்று அவர் சொன்னார்.
மக்களுக்கு உயர் தரத்திலான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் மாநில அரசுக்கு உள்ள ஆற்றலை இந்த முதலீட்டுச் சாதனை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த உயர்ந்த பட்ச எண்ணிக்கையிலான முதலீடுகள், உற்பத்தி, இயந்திரவியல் மற்றும் சேவைத் துறையில் தரமான மற்றும் உயர் வருமானம் ஈட்டக்கூடிய வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்பதற்கான சான்றாகும் என்றார் அவர்.
புத்தாண்டை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம். 2025ஆம் ஆண்டு இன்னும் சிறப்பான ஆண்டாக இருக்கும் வகையில் இவ்வாண்டு கண்ட முன்னேற்றத்தை விட இன்னும் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்வதற்கான தருணம் இது என நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
மாநிலம் தனது வளர்ச்சித் திறனை அதிகரிக்கும் அதே வேளையில் பொருளாதார அடிப்படையை உயர்த்துவதற்கான நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்து கூறிய அமிருடின், நேசத்துக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்குரிய வாய்ப்பினை இந்த பெருநாள் விடுமுறை வழங்குகிறது என்றார்.








