அன்றைய தினம் 2.50 மணியளவில் நடத்தப்பட்ட ஒப்ஸ் செர்காப் நடவடிக்கையின் மூலம் 37 மற்றும் 42 வயதுடைய இரண்டு வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமது டாருஸ் கூறினார்.
வங்காளதேச குடிமக்களை சிங்கப்பூர் வழியாக மலேசியாவிற்கு கடத்தும் இந்த நடவடிக்கை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப் பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தச் சோதனையில் பல வங்களாதேச கடப்பிதழ்கள், வெ.14,500 ரொக்கம் மற்றும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டது. அச்சோதனையின் போது அந்த டிரான்சிட் வீட்டில் இரண்டு ஆடவர்கள் மட்டுமே இருந்துள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுல்தான் அபுபாக்கர் வளாகத்தின் (கேஎஸ்ஏபி) நுழைவாயில் வழியாக மலேசியாவிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் முந்தைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை செனாயில் உள்ள ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர்கள் என்று நம்பப்படும் 12 மற்றும் 13 வயதுடைய ஒரு பிலிப்பைன்ஸ் சிறுவன், சிறுமியை தாங்கள் மீட்டதாக முகமது ரூஸ்டி மற்றொரு அறிக்கையில் கூறினார்.


