கோலாலம்பூர், டிச. 21 - வரும் புதன்கிழமை கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பை பெறுவர்.
இந்த கட்டணமில்லா பயணச் சலுகை திங்கள்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை இரவு 11.59 மணிக்கு முடிவடையும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்தார்.
இருப்பினும், தேசிய எல்லைகளில் உள்ள பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர் மற்றும் தஞ்சோங் குப்பாங் தவிர இதர அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமல்படுத்தப்படும் இந்த சலுகை முதல் பிரிவு வாகனங்களுக்கு (தனியார் வாகனங்கள்) மட்டுமே பொருந்தும் என்று அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பானது 2024 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டிய 'மடாணி டி ஹத்தி, ரக்யாட் டி சாந்துனி' அபிலாஷைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
இந்த டோல் கட்டண சலுகையினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதி தாக்கம் 3.8 கோடி வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைப் பயன்படுத்துவோர் இந்த சலுகையை முறையாகப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைச் சிறப்பாகத் திட்டமிடவும், வழங்கப்பட்ட பயண நேர ஆலோசனையைக் கடைப்பிடிக்கவும் நந்தா அறிவுறுத்தினார்.
வாகன ஓட்டிகள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கும் அதேவேளையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதே சமயம், வாகனங்கள் மற்றும் டயர்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், டச் என் கோ கார்டுகள் மற்றும் இ-வாலட்களில் போதுமான பண இருப்பு வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.








