சுபாங் ஜெயா, டிச. 21- சுபாங் ஜெயா வட்டாரத்திலுள்ள குடியிருப்பாளர்களுக்கு மாநகர் மன்றம் அடுத்தாண்டு தொடங்கி 60,000 குப்பைத் தொட்டிகளை இலவசமாக வழங்கவுள்ளது. இந்த நோக்கத்திற்காக ஒன்றரை கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.
வரும் 2026 ஆம் ஆண்டு வரை இரு கட்டங்களாக மேற்கொள்ளப் படவிருக்கும் இத்திட்டத்தின் கீழ் 120 லிட்டர் அளவிலான குப்பைத் தொட்டிகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய மதிப்பீட்டு வரி அடுத்தாண்டு அமல்படுத்தப் படவுள்ள நிலையில் பதிவு பெற்ற குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக குப்பைத் தொட்டிகளை வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை மாநகர் மன்றம் அமல் படுத்தவுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த நோக்கத்திற்காக நாங்கள் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளோம். அடுத்தாண்டு எட்டு லட்சம் வெள்ளி செலவிடப்படும் வேளையில் எஞ்சியத் தொகை வரும் 2026 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
தொடக்கத்தில் இந்த திட்டம் பதிவு பெற்ற குடியிருப்பு பகுதிகளில் அமல்படுத்தப்படும். பின்னர் அது வர்த்தக வளாகங்களுக்கு விரிவு படுத்தப்படும். இந்த மதிப்பீட்டு வரி உயர்வு மாநகர் மன்றத்திற்கு அதிக வருமானத்தைப் பெற்றுத் தராததே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இலவசமாக குப்பைத் தொட்டிகளை வழங்குவது தவிர்த்து மாநகர் மன்றப் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
வடிகால்கள் இலைகள் உள்ளிட்ட கழிவுகளால் அடைபடும் காரணத்தால் நகரங்களிலும் இப்போது திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. ஆகவே, மாநகர் மன்றம் வடிகால்கள் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து வருகிறது என்று அவர் கூறினார்.








