அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் வரித் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் விளையாட்டு மைதானம் மற்றும் குப்பை சேகரிப்பு உள்ளிட்ட சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று டத்தோ பண்டார் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.
2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 46 கோடியே 91 லட்சம் வெள்ளியைச் சேர்த்துள்ளோம். புதிய வரி விகிதத்தைத் தொடர்ந்து 7 கோடி வெள்ளி கூடுதல் பட்ஜெட்டைப் பெற்றுள்ளோம்.
மாநகர் மன்ற உறுப்பினர்கள் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். நாங்கள் அவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். வடிகால், விளையாட்டு மைதானங்கள், சாலைகள் மற்றும் குப்பை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை அளிக்க விரும்பும் திட்டங்களை இப்போது நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம் என்று அவர் மாநகர் மன்றக் கூட்டத்திற்கு பின்னர் கூறினார்.
ஊராட்சி மன்றங்களுக்கான புதிய வரி நடைமுறைக்கு வந்த பிறகு 100 நாட்களுக்குள் செயல்படுத்த விரும்பும் ஐந்து பொது சேவை திட்டங்களின் பட்டியலை வழங்கும்படி ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
புதிய வரி விகிதத்தை விதித்த பிறகு ஊராட்சி மன்றங்கள் பணியில் காட்டும் தீவிரத்தை அறியவும் தாங்கள் செலுத்தும் வரி எங்கு செல்கிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டும் என்று ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் ஸீ ஹான் கூறியிருந்தார்.








