பாரிஸ்/மோரோனி, டிச. 16- இந்த நூற்றாண்டின் மிக மோசமான மற்றும்
சக்தி வாய்ந்த சூறாவளி பிரஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான
மயோட்டியை நேற்று தாக்கியது. இந்த பேரிடரில் நூற்றுக்கணக்கானோர்
அல்லது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என
அஞ்சப்படுவதாக பிரஞ்சு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
பல நூறு பேர் அல்லது ஆயித்திற்கும் மேற்படோர் உயிரிழந்திருக்கலாம்
என நிச்சயமாக கருத முடியும் என்று பிரான்கோய்ஸ் சேவியர் பியூவில்
உள்ளுர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
சீடோ சூறாவளியினால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்து வினவப்பட்ட
போது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை தற்போதைக்கு கூறுவது
கடினம் என்று பிரஞ்சு உள்துறை அமைச்சர் மீட்டியோ பிரான்ஸ் கூறினார்.
சீடோ சூறாவளி மயோட்டியை நள்ளிரவில் தாக்கியது. காற்றின் வேகம்
மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை இருந்தது. இதனால், வீடுகள், அரசாங்கக்
கட்டிடங்கள் மற்றும் ஒரு மருத்துவமனை சேதமடைந்தன. கடந்த 90
ஆண்டுகளில் அந்த தீவுக் கூட்டத்தை தாக்கிய மிக மோசமான
சூறாவளியாக இது விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் மிகப்பெரிய பேரிடரை
எதிர்கொண்டுள்ளோம். அணுவாயுதப் பேருக்கு பிந்திய பகுதி போல்
காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த குடியிருப்புகளும் மறைந்து விட்டன
என்று மயோட்டி தலைநகரான மாமோட்ஸேவைச் சேர்ந்த
குடியிருப்பாளரான முகமது இஸ்மாயில் ராய்ட்டர்ஸ் செய்தி
நிறுவனத்திடம் கூறினார்.
மயோட்டி தீவுகளில் ஒன்றில் சூறாவளியினால் தரை மட்டமான
வீடுகளையும் குன்றுகளின் மீது அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களையும் சித்தரிக்கும் காணொளி ஒன்றை பிரஞ்சு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அருகிலுள்ள கேமோரோசைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளின்
புகலிடமாக இந்த மயோட்டி தீவு விளங்குகிறது. சுமார் 100,000 ஆவணமற்ற
அந்நிய நாட்டினர் இங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.


