கோல கிராய், டிச. 16- வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் இங்குள்ள
சுங்கை டுரியான் ஆற்றில் பாய்ந்தது. நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த
இச்சம்பவத்தில் 28 வயதுடைய கார் ஓட்டுநர் தெய்வாதீனமாக
உயிர்த்தப்பினார்.
இந்த விபத்து குறித்து மாலை 6.23 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
மஸ்லான் மாமாட் கூறினார்.
சம்பவத்தைக் நேரில் கண்ட பொது மக்கள் விரைவாகச் செயல்பட்டு நீரில்
மூழ்கிக் கொண்டிருந்த காரிலிருந்து அந்த ஆடவரை மீட்டதாக அவர்
தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த ஆடவர் புரோட்டோன் எக்ஸோரா
காரில் கோத்தா பாருவிலிருந்து கோல கிராய் நோக்கிச் சென்று
கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த விபத்தில் அந்த ஆடவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் தொடர் பரிசோதனைக்காக அவர் கோல கிராய், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்பட்டார் என்று அவர் சொன்னார்.
அந்த காரின் ஓட்டுநர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை எனக்
கூறிய அவர், இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய அந்த
ஆடவரின் புகார் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாகத் தெரவித்தார்.


