ஷா ஆலம், டிச.15- கோல சிலாங்கூர், பண்டார் புஞ்சா ஆலம், தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள மூன்று தளவாடப் பொருள் மற்றும் அட்டைப் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 9.44 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது 100x80 சதுர மீட்டர் பரப்பளவிலான மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அந்த தொழிற்சாலைகளில் தீ கொளுந்து விட்டெரியும் நிலையில் தீயை அணைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணியில் பெஸ்தாரி ஜெயா, சுங்கை பூலோ, காப்பார், புக்கிட் ஜெலுத்தோங், பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா மற்றும் பத்து ஆராங் ஆகிய ஏழு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.








