ஷா ஆலம், டிச. 11- பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பதன் மூலம் வாகனமோட்டிகளின் பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக மாநில அரசு ஆண்டுதோறும் மெகா சாலை சீரமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
சாலைகளில் ஏற்பட்ட பழுது தொடர்பில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களிடமிருந்து புகார்கள் கிடைத்தப் பின்னர் சீரமைப்பு பணிகளில் எந்த சாலைக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து தாங்கள் முடிவெடுப்பதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் பார்வையின் கீழுள்ள பல சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டியுள்ளது. ஆகவே, சாலைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்தாண்டும் 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மெகா சாலை சீரமைப்புத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு, சாலைகளைச் சீரமைப்பதற்கு ஊராட்சி மன்றங்கள், பொதுப்பணி இலாகா மற்றும் மாவட்ட இலாகா செய்த விண்ணப்பங்களை நாங்கள் சேகரித்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டோம் இந்த திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தாண்டும் இதே திட்டத்தை தொடர்வது நல்லது என நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
செப்பனிடப்படும் சாலைகள் விரைவில் பழுதுடைவதாக எழும் புகார்கள் குறித்து கருத்துரைத்த இஷாம், வழக்கமாக சாலைகளின் பயன்பாட்டுக் காலம் 20 முதல் 25 ஆண்டுகளாகும் என்றார்.
சாலைகள் பழுதடைந்தால், பழுதடைந்த பகுதியை மட்டும் சரி செய்வதால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் இது சில தினங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்றார் அவர்.
சாலை சீரமைப்பு பணிகளை அவ்வப்போது மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். அதிக செலவுத் தொகையை உள்ளடக்கியுள்ளதால் இப்பணியை தொடர்ந்தாற்போல் மேற்கொள்ள இயலாது என அவர் குறிப்பிட்டார்.








