ஷா ஆலம், டிச. 9- வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் 25 விழுக்காடு அதிகரிப்பை உட்படுத்திய மதிப்பீட்டு வரி மறுசீரமைப்பை சிலாங்கூர் அரசு இன்று அறிவித்துள்ளது.
நூறு விழுக்காடு வரி அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் சொத்து உரிமையாளர்கள் புதிய கட்டண நிர்ணயத்தின் மூலம் 75 சதவிகிதம் வரை தள்ளுபடியைப் பெறுவார்கள் என்று ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்,
உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான மதிப்பீட்டு வரி வருடத்திற்கு 100 ஆக இருந்திருந்தால் மறுமதிப்பீட்டிற்கு பிறகு அது வருடத்திற்கு 200 வெள்ளியாக உயர்ந்திருக்கும்.
இருப்பினும் , தற்போது நிர்ணயிக்கப்பட்ட 25 சதவிகிதம் வரையிலான அதிகரிப்பு காரணமாக 2025 இல் செலுத்தப்பட வேண்டிய புதிய வரியின் அளவு 125 வெள்ளியாக மட்டும் இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த தள்ளுபடி வரி விகித அதிகரிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்பதோடு இதன் மூலம் அனைத்து ஊராட்சி மன்றங்களும் 35 கோடியே 50 லட்சம் வெள்ளியை கூடுதல் வருமானமாகப் பெறும் என்று விஸ்மா டேவான் நெகிரி சிலாங்கூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மதிப்பீட்டு வரி 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டால் அது பெரும் சுமையாக இருக்கும் என்ற பொது மக்கள் மற்றும் பங்களிப்பாளர்களின் ஆதங்கத்தை அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய மதிப்பீட்டு வரி அமல் படுத்தியது.
வசதியான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான பல்வேறு பொது உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் ஊராட்சி மன்றங்களின் திறன் மேம்படுத்துதல் மாநில அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்று இங் கூறினார்.
சிலாங்கூரில் உள்ள எட்டு ஊராட்சி மன்றங்கள் கடந்த 20 முதல் 40 ஆண்டுகளாக தங்கள் நிர்வாகப் பகுதியில் மதிப்பீட்டு வரி விகிதத்தை மறு ஆய்வு செய்யவில்லை என்று மீடியா சிலாங்கூர் முன்னதாக கூறியிருந்தது.
காஜாங் நகராண்மைக் கழகம் கடந்த 1985 முதல் 39 ஆண்டுகளாக விகிதத்தை உயர்த்தவில்லை. கோல லங்காட்டில் 1987 முதல் 37 ஆண்டுகளாகவும் செலாயாங்கில் 1992 முதல் 32 ஆண்டுகளாகவும் சுபாங் ஜெயாவில் 1992 முதற்கொண்டு வரிகள் உயர்த்தப் படவில்லை.
மேலும், அம்பாங் ஜெயா மற்றும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகங்கள் 1997 முதல் 27 ஆண்டுகளாகவும் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 1996 முதல் 28 ஆண்டுகளாகவும்
ஷா ஆலம் மாநகர் மன்றம் 2006 முதல் 18 ஆண்டுகளாகவும் மதிப்பீட்டு வரி உயர்த்தவில்லை.








