(ஆர். ராஜா)
கிள்ளான், டிச. 6- இங்குள்ள பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் உள் கூரை இடிந்து விழுந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு உடனடியாக அப்பள்ளிக்கு விரைந்து நிலையை நேரில் பார்வையிட்டார்
.
கிள்ளான் மாவட்ட கல்வி இலாகாவின் மாணவர் மேம்பாட்டு பிரிவின் துணை கல்வி அதிகாரி அகமது லுத்ஃபி முகமது யாஸிட், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி பொறுப்பாளர்களும் அப்போது உடனிருந்தனர்.
இச்சம்பவம் பெரிதும் அதிர்ச்சியூட்டுவதோடு மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக பாப்பா ராய்டு சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் பள்ளி நிர்வாகத்துடன் நான் பேச்சு நடத்தினேன். பாதிப்பை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இடிந்து விழுந்த பள்ளியின் உள் கூரை மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் சரி செய்வதற்கும் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களுக்கு பதிலாக புதிதாகப் பெறுவதற்கும் நான் ஒப்புதல் வழங்கினேன் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தாம் எப்போதும் முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.







