செத்தியூ, டிச.1- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களுக்கு கூடுதலாக 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவ்விரு மாநிலங்களுக்கும் தலா 2 கோடியே 50 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சின் வாயிலாக பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவிடம் (ஐ.சி.யு.) வழங்கப்படும் இந்த நிதி, சாலைகள் மற்றும் கழிவு நீர் முறையை சீரமைப்பதற்கும் உலு பெசுட் சாலையை உயர்த்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், திரங்கானு மாநிலத்திலுள்ள 14,000 அரசு ஊழியர்களுக்கு தலா 500 வெள்ளி சிறப்பு உதவித் தொகை வழங்குவதற்காக 74 லட்சம் வெள்ளியை ஒதுக்க மத்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செத்தியூ, கம்போங் தெலாகா பாப்பான் தேசிய பள்ளியில் அடைக்கலம் நாடியுள்ள வெள்ள அகதிகளைப் சென்று கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த மையத்தில் 269 பேர் தங்கியுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தில் நிலவும் வெள்ளப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் இன்று காலை 10.25 மணிக்கு கோல திரங்கானு வந்தடைந்தார்.


