கோலாலம்பூர், நவ. 24 - போதைப் பொருளுக்கு எதிரான மலேசியாவின் அணுகுமுறை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சமூக பாதுகாப்புக்கான கூட்டணியின் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தை வலியுறுத்தியுள்ளார்.
குறைபாடுகளைக் கண்டறிந்து சிக்கலைத் திறம்பட நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீர்மானிக்க இந்த மறுஆய்வு அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.
போதைப்பொருள் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதில் அமலாக்க நிறுவனங்கள் அதி முக்கியப் பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இப்பிரச்சினையைச் சமாளிக்க காவல்துறை மற்றும் போதைப்பொருள் அமலாக்க நிறுவனங்கள் மூலம் நிறைய செய்யப்பட்டுள்ளது, ஆனால் பிரச்சனையை அடிமட்ட நிலையில் தீர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
போதைப்பொருளை விநியோகிப்பவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களைக் குறிவைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று லீ இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 31.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசியாவில் 15 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 5.5 சதவீதம் பேர் வாழ்நாள் முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் என்று முந்தைய அறிக்கை குறிப்பிட்டது. உண்மையான எண்ணிக்கையை விட குறைத்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மாணவர்கள் மத்தியில் காணப்படும் மின் சிகிரெட் உள்பட இந்த அலையைத் தடுக்க நாம் போதுமான அளவு செய்யவில்லை என்பது வெளிப்படையானது என்று லீ கூறினார்.
ஆபத்தில் இருக்கும் இளைஞர்களுக்கான தலையீட்டுத் திட்டங்களை உருவாக்க அமலாக்க நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தங்கள் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளிடையே காணப்படும் நடத்தை மாற்றங்களை அவர்கள் கவனிக்கும் அதேவேளையில்
தேவைப்படும்போது வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்க வேண்டும் என்றார் அவர்.
கூடுதலாக, பள்ளிகள் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் அபாயங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்த பட்டறைகள் மற்றும் பேச்சுக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் லீ வலியுறுத்தினார்.








