ஷா ஆலம், நவ. 24- காலியாக உள்ள நிலங்களில் சமூக வேளாண்
திட்டத்தை அமல்படுத்தும்படி அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர். நீடித்த சூழியல் முறையின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்கு இந்த முன்னெடுப்பு அவசியமாகிறது என்று வீடமைப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
இத்தகைய வேளாண் திட்டங்களின் வாயிலாக சுற்றுபுறத்தை
அழகுபடுத்தும் அதேவேளையில் பொருளாதார வளர்ச்சிக்கும் வட்டார
மக்களின் உணவுத் தேவையையும் ஈடுசெய்வதற்கும் இயலும் என்று அவர்
சொன்னார்.
தற்போது மாநிலம் முழுவதும் 42 சமூக வேளாண் திட்டங்கள் உள்ளன.
ஊராட்சி மன்றங்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு
காரணமாக இந்த திட்டத்தின் மீதான பொது மக்களின் ஈடுபாடு அதிகரித்து
வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு 2024 அடுக்குமாடி குடியிருப்பு பசுமைத் திட்ட விருதளிப்பு
நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, 2024 ஆம் ஆண்டிற்கான அடுக்குமாடி குடியிருப்பு பசுமைத்
திட்ட விருது மற்றும் பொருளாதார ஆக்கத்திறனளிப்பு விருது
ஆகியவற்றை பெர்மாய் புத்ரா அடுக்குமாடி குடியிருப்பு சமூக வேளாண்
திட்டம் வென்றது.
இத்தகைய சமூக வேளாண் திட்டங்களை மேம்படுத்துவதில் ஊராட்சி
மன்றங்களும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று
பொர்ஹான் கேட்டுக் கொண்டார்.
முன்பு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மட்டும் இத்தகையத்
திட்டங்களுக்கு உதவி வந்தது. ஆனால் இப்போது சுபாங் ஜெயா மாநகர்
மன்றம் உள்ளிட்ட தரப்பினர் உதவிட முன்வந்துள்ளனர் என்றார் அவர்.








