கோலாலம்பூர், நவ. 22- தேடப்பட்டு வரும் வர்த்தகரான ஜோ லோ எனப்படும் லோ தாய் ஜோ மியன்மாரில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவரிடம் இருப்பிடம் குறித்த தகவல் அரச மலேசிய போலீஸ் படைக்கு கிடைக்கவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
ஆசியான் போலீசின் (ஆசியான்போல்) உறுப்பினராக மியன்மார் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 1 மலேசிய டெவலெப்மெண்ட் பெர்ஹாட் வழக்கில் முக்கிய சந்தேக நபரான ஜோ லோ மியன்மார் நாட்டில் இருக்கும் பட்சத்தில் அது குறித்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் நிச்சயம் பகிர்ந்து கொள்வர் என்று குறிப்பிட்டார்.
தகவல் ஏதும் இருக்கும் பட்சத்தில் அது பகிர்ந்து கொள்ளப்படும். தற்போதைக்கு எந்த புதிய தகவலும் இல்லை. மியன்மாரும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் 2024ஆம் ஆண்டிற்கான போலீஸ் அடிப்படை பயிற்சி அணிவகுப்பை முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இண்டர்போல் மற்றும் ஆசியான்போல் உடன் மலேசியாவின் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய ரசாருடின், அண்மையில் ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடைபெற்ற இண்டர்போல் பொது பேரவையில் தாம் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
ஜோ லோ தாய்லாந்தில் பதுங்கியிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா அண்மையில் கூறியிருந்தார்.








