(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 20- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமுகத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றத் திட்டத்தைப் போல் பிரத்தியேகத் திட்டத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மித்ரா சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், எனினும் சிலாங்கூரில் அது போன்ற திட்டம் அல்லது நிதி எதுவும் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறினார்.
ஆகவே, குறைந்த பட்சம் ஐம்பது லட்சம் வெள்ளி நிதியில் இத்தகைய நிதித் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்த வேண்டும். எனது இந்த கோரிக்கையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்..
இன்று மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிதி போதுமான அளவில் இருப்பதையும் அவை முழுமையாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய அந்த ஒதுக்கீடுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிதிப் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் திட்டங்கள் தடைபடாமலிருக்க உபரி பட்ஜெட் பற்றி பரிசீலிக்க வேண்டும். அதே சமயம், நடப்பிலுள்ள திட்டங்களின் ஆக்கத்தன்மை மற்றும் அதன் தாக்கங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அவை மீதான தணிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் அத்திட்டங்களில் காணப்படும் பலவீனங்களைச் சரி செய்ய இயலும் என குணராஜ் குறிப்பிட்டார்.








