புத்ராஜெயா, நவ. 20 - நாட்டில் மருந்துகள் குறிப்பாக மனிதர்களுக்கான
இன்சுலின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அடுத்தாண்டு
தொடக்கத்தில் மருந்து கொள்முதலுக்கான கூடுதல் ஒப்பந்தங்களை
வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ
டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
கடந்த ஆகஸ்டு மாதம் மனிதர்களுக்கான இன்சுலின் விநியோகத்தில்
ஏற்பட்ட பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை
எடுக்கப்படுவதாகக் கூறிய அவர், இந்த பற்றாக்குறை காரணமாக
நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி
செய்வதற்கான நடவடிக்கைளை விரைந்து மேற்கொண்டதாகக்
குறிப்பிட்டார்.
அமைச்சின் பட்டியலில் சில நிறுவனங்கள் உள்ளதோடு அவற்றுக்கு
உரிமம் வழங்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளோம். அவை மக்களுக்கு நன்கு அறிமுகமான சாதாரண
நிறுவனங்கள் என்பதோடு மனிதர்களுக்கான இன்சுலின் தயாரிப்புக்கான
முதலீட்டில் ஈடுபட அவை கடப்பாடு கொண்டுள்ளன என்று அவர்
தெரிவித்தார்.
நேற்று இங்கு 2024ஆம் ஆண்டிற்கான அனைத்துலக நுண்ணுயிர் எதிர்ப்பு
வார நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.
கடந்த ஆகஸ்டு மாதம் மனிதர்களுக்கான இன்சுலின் பற்றாக்குறை
நிலவிய போதிலும் அந்த மருந்தின் கையிருப்புக் குறைவை மலேசியா
ஒருபோதும் எதிர்நோக்கியதில்லை என்று ஜூல்கிப்ளி தெளிவுபடுத்தினார்.
நாட்டில் மருந்து விநியோகம் பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும்
இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மருந்து கொள்முதல் ஒப்பந்தம் ஒரே நிறுவனத்திடம் மட்டும் இருப்பதை அரசாங்கம் இனியும் அனுமதிக்காது என்று அவர் முன்னதாக நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.


