ரியோ டி ஜெனிரோ, நவ. 19 - ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் ஐந்து நாடுகள் வைத்திருக்கும் வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் மேலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அமைப்பு முறை மிகவும் நியாயமற்றது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக விவாதத்தில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தம் பற்றி பேசுகிறோம். நாங்கள் இலட்சியங்கள், மனிதநேயம், மற்றும் மனிதாபிமான மதிப்புக்கூறுகள் பற்றி பேசுகிறோம்.
நாங்கள் பிரதிநிதிகளைப் பற்றி பேசுகிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து பிரதிநிதித்துவம் இல்லை, லத்தீன் அமெரிக்காவிற்கு பிரதிநிதித்துவம் இல்லை. யார் கவலைப்படுகிறார்கள்?
எனவே, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களிலிருந்து போதுமான ஜனநாயக பிரதிநிதித்துவத்தை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களைத் தவிர்த்து விட்டு ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தை தொடர்வது மிகவும் நியாயமற்றது என்று அன்வார் கூறினார்.
நேற்று ஜி20 உச்ச நிலை மாநாட்டில் 'உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களின் சீர்திருத்தம்' இரண்டாவது அமர்வில் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்
ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் 'பிக் ஃபைவ்' என அழைக்கப்படும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விளங்குகின்றன.


