(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 17- சிலாங்கூர் மாநில அரசினால் இந்திய சமூகத்திற்காக அமல்படுத்தப்படும் அனைத்து மேம்பாட்டு திட்டங்களும் அடுத்தாண்டும் தொடரப்படுவது 2025ஆம் ஆண்டிற்கான மாநில வரவு செலவுத் திட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள வேளையில் இரு பிரதான திட்டங்களுக்கான மானியம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணத் திட்டத்திற்கான மானியம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர்வு கண்டுள்ளது.
இந்து ஆலயங்கள், பௌத்த கோயில்கள், கிறிஸ்துவ தேவலாயங்கள் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான வருடாந்திர மானியம் 60 லட்சம் வெள்ளியிலிருந்து 80 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.
அதே போல் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்துக் கட்டணத் திட்டத்திற்கு அடுத்தாண்டு பட்ஜெட்டில் 11 லட்சத்து 85 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப் பட்டுள்ளது. கடந்தாண்டு இத்திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் பெருநாள் கால இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மானியமும் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இவ்வாண்டு தீபாவளி பெருநாளின் போது அனைத்து 56 தொகுதிகளையும் சேர்ந்த வசதி குறைந்த 22,000 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளை வழங்க மாநில அரசு 44 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த இந்திய வர்த்தகர்களுக்கு வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்கும் ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவுக்கு அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல் அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்கும் மற்றொரு திட்டமான புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெரும் திட்டத்திற்கு 20 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்று பாப்பாரய்டு கூறினார்.
மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு கடந்த ஆண்டுகளைப் போலவே அடுத்தாண்டிற்கும் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்கும் திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி அறிவிக்கப் பட்டுள்ளது என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.
நேற்று மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடிய பட்சம் 5,000 வெள்ளியும் டிப்ளோமா மாணவர்களுக்கு கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
எனினும். இந்த திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் அதிகமான மாணவர்கள் பயன் பெறும் வகையிலும் இவ்வாண்டு தொடங்கி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 3,000 வெள்ளியும் டிப்ளோமா மாணவர்களுக்கு 2,000 வெள்ளியும் வழங்கும் வகையில் இத்திட்டத்தில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளோம் என அவர் தெளிவுபடுத்தினார்.
அதேபோல், மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் தீபாவளி, தைப்பூசம் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளை ஏற்று நடத்துவதற்கு வழங்கப்படும் மானியத்தை அடுத்தாண்டும் கணிசமான அளவு அதிகரிக்க மந்திரி புசார் வாக்குறுதி அளித்துள்ளார் என அவர் சொன்னார்.
கார்னிவல் கெர்ஜாயா ஜோப்கேர் எனப்படும் வேலை வாய்ப்புச் சந்தையை ஏற்று நடத்துவதற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 250,000 வெள்ளி நிதி அடுத்தாண்டில் 300,000 வெள்ளியாக அதிகரிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகம் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கி வரும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசுக்கு சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாப்பா ராய்டு சொன்னார்.








