நிபோங் திபால், நவ. 16- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும்
வகையில் கல்விக் கழகங்களுக்கான வெள்ளப் பேரிடர் மேலாண்மை
வழிகாட்டியை கல்வியமைச்சு தயாரித்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட கல்விக் கழக
தரப்பினரின் நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அமைச்சு மிகுந்த
அக்கறை கொண்டுள்ளதாக கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
இதன் அடிப்படையில் முன்கூட்டியே ஏற்படும் என கணிக்கப்படும்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாக அவர் சொன்னார்.
கல்விக் கழகம் சார்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் பேரிடரை
எதிர்கொள்வதில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வகையில்
பேரிடர் இடர் தவிர்ப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.
இன்று நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான
மைலைசென்ஸ பி2 2024 திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
பேரிடரை எதிர்கொள்வது மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பான
விரிவான விளக்கமும் மாணவர்களுக்கு வழஙகப்படுவதாக அவர்
தெரிவித்தார்.
பள்ளிகள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களாகவும் தன்னார்வலர்கள்
பயிற்சியில் ஈடுபடுவதற்கான இடமாகவும் விளங்குவதால் பள்ளிகளில்
உள்ள வசதிகளை முறைப்படுத்துவதிலும் அமைச்சு கவனம் செலுத்தி
வருகிறது என்று ஃபாட்லினா சொன்னார்.
மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உகந்த மற்றும் பாதுகாப்பான இடமாக
விளங்குவதை கல்வியமைச்சு உறுதி செய்யும். நீண்ட கால வெள்ள
பாதிப்பு அல்லது இதர காரணங்களால் மாணவர்கள் பள்ளியில் கல்வியைத்
தொடர முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலை
மேற்கொள்ளும் முறை அமல்படுத்தப்படும் என்றார் அவர்.








