(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 16- வறிய நிலையில் உள்ளவர்களின் அவலங்களை
குறிப்பால் உணர்ந்து அவர்களுக்கு உரிய உதவிகளை உரிய நேரத்தில்
வழங்குவதுதான் உயரிய சேவையின் உண்மையான அடையாளமாக
விளங்கும்.
அந்த வகையில் ஏழ்மையை முகவரியாகக் கொண்ட ஒரு இந்திய
குடும்பத்தை அடையாளம் கண்டு அதன் பொருளாதார வளர்ச்சிக்கு பாதை
அமைத்துக் கொடுக்கும் உன்னதப் பணியை சிறப்பாக ஆற்றியுள்ளது ஐ-
சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர்
மேம்பாட்டு இலாகா.
மீன்படித் தொழிலை வருமானத்திற்கான ஆதாரமாக நம்பியிருக்கும் கோல
சிலாங்கூர், ஜெராமைச் சேர்ந்த தீபன் குப்புசாமிக்கு படகிற்கான மோட்டார்
இயந்திரத்தை வழங்கி உதவியிருக்கிறது ஐ-சீட். பிரதான சாலையிலிருந்து
சுமார் தொலைவில் புதர் மண்டிய பகுதிக்கு மத்தியில் சிதிலமடைந்த
வாடகை வீட்டில் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் தீபன் வசித்து
வருகிறார். கடலில் மீன்கள் இருந்தாலும் அவை தீபானுக்கு கிடைக்கும்
என்பது நிச்சயமில்லை. அதனால் அவருக்கு வருமானமும்
நிரந்தரமில்லை.
அண்மையில் நடைபெற்ற கோல சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஐ-சீட்
வர்த்தக உபகரண ஒப்படைப்பு நிகழ்வின் போது மனிதவளம் மற்றும்
வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு
தீபனின் வீட்டிற்கு நேரில் சென்று இந்த உதவிப் பொருளை ஒப்படைத்தார்.

அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் சோசமான நிலையில் காணப்படும்
வீடு, அருகிலுள்ள புதர்களிலிருந்து அடிக்கடி படையெடுக்கும் பாம்புகள்
என பலவித இன்னல்களுக்கு மத்தியில் வசித்து வரும் இக்குடும்பத்தின்
நிலையைக் கண்டு தாம் மனம் கலங்கிப் போனதாக பாப்பாராய்டு
குறிப்பிட்டார்.
தீபன் குடும்பத்திற்கு மாநில அரசின் சிலாங்கூர கூ வீடுகள் கிடைப்பதில்
வேண்டிய உதவிகளைச் செய்யும்படி தமது தொகுதி அதிகாரிகளை தாம்
பணித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஐ-சீட் வாயிலாக தீபனுக்கு கிடைத்த இந்த உதவி வருமானதைப்
பெருக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்
எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.








