ஷா ஆலம், நவ. 16- சிலாங்கூர் இணைய டெண்டர் முறையை தரம் உயர்த்த 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 523,800 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இணைய டெண்டர், நடைமுறையில் உள்ள தற்போதைய முறை ஏற்கனவே மூன்று முறை தரம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் உயர்ந்த பட்ச நிலைக்கு கொண்டு வரப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு உண்டாகும் செலவையும் இதன் மூலம் குறைக்க முடியும். இது தவிர கொள்முதல் மதிப்பீட்டுப் பணியில் வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்க இயலும் என்று நேற்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உயர் தாக்கம் கொண்ட நிர்வாக முறையை மேம்படுத்துவதற்கு 600,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத் தகவலையும் மந்திரி புசார் வெளியிட்டார்.
ஒரு திட்டம் தொடர்பான அறிவிப்பு தொடங்கி அதில் சம்பந்தப்பட்டுள்ள துறைகள், செலவிடப்டும் தொகை, திட்டமிடல் மற்றும் அமலாக்கம் வரை அனைத்து கட்ட பணிகளையும் கண்காணிக்கும் வகையில் உயர் தாக்கம் கொண்ட திட்ட மேலாண்மை முறை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.








