கோலாலம்பூர், நவ. 16- சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாக
கூறப்படும் ஊழல் தொடர்பான காணொளியை அம்பலப்படுத்தியதில்
தொடர்புடைய நபருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அவரின் வழக்கறிஞர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அணுகியுள்ளார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி.
தலைமையகத்திற்கு வந்த அந்த வழக்கறிஞர், அந்த ஊழல் தொடர்பான
தகவல்களை வழங்கியதோடு இந்த வழக்கு விசாரணையிலிருந்தும்
நீதிமன்ற நடவடிக்கையிலிருந்தும் தனது கட்சிக்காரருக்கு 2010ஆம் ஆண்டு
தகவல் அளிப்போர் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக சட்டப்பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக எம்.ஏ.சி.சி. தலைமை
ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
இந்த வழக்கில் மட்டுமல்ல, வேறு எந்த வழக்கிலும் சட்டப்பாதுகாப்பை
வழங்க முடியாது. அரசு வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டுச்
செல்லப்பட்டப் பின்னரே சட்ட பாதுகாப்பு குறித்து முடிவெடுக்க இயலும்
என்று தாங்கள் அந்த வழக்கறிஞரிடம் தெரிவித்து விட்டதாக அவர்
குறிப்பிட்டார்.
ஊழல் வழக்கைப் பொறுத்த வரை லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும்
குற்றமே. இருப்பினும், லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் நபரின்
ஈடுபாட்டின் அளவை நாங்கள் மதிப்பீடு செய்வோம் என அவர் சொன்னார்.
அந்த சந்திப்பின் போது 17 விநாடி நேரமே ஓடக்கூடிய தெளிவற்ற
காணொளி தங்களிடம் வழங்கப்பட்டதாகக் கூறிய அஸாம், இதன்
தொடர்பான இதர காணொளிகளை அந்த வழக்கறிஞர் இணைய ஊடகம்
ஒன்றில் பகிர்ந்து கொண்டார் என்றார்.
இது நியாயப்படுத்த முடியாத ஒரு தந்திரமாகும். அமலாக்க
அதிகாரிகளுக்கு ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள்? அந்த கூட்டத்தில் அந்த
வழக்கறிஞர் குறிப்பிட்ட 2010 தகவல் அளிப்போர் பாதுகாப்புச் சட்டம்
அவரின் கட்சிக்காரருக்கு பொருத்தும் வகையில் இல்லை என்றார் அவர்.








