சிப்பாங், நவ. 16- சிப்பாங் மாவட்ட நிலையிலான ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு இன்று தொடக்கி வைத்தார்.
பண்டார் பாரு சாலாக் திங்கி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 28 முதலாளிகள் 3,621 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர். இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொண்டுள்ள பெரிய நிறுவனங்களில் போஸ் ஏவியேஷன் சென். பெர்ஹாட் இ.ஆர்.எல். மெய்ண்டேனன்ஸ் சப்போர்ட் சென். பெர்ஹாட், ரெடிகேர் (ம) சென். பெர்ஹாட் ஆகியவையும் அடங்கும்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த யு.பி.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட பாப்பாராய்டு, இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு தாம் வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.
மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை மாநில அரசு யு.பி.பி.எஸ். வாயிலாக நடத்தி வருகிறது.
இன்றைய நிகழ்வுடன் மொத்தம் எட்டு மாவட்டங்களில் இந்த வேலை வாய்ப்புச் சந்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மாவட்டமான சபாக் பெர்ணமில் வரும் டிசம்பர் 14ஆம் இந்த வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறவுள்ளது.
சிப்பாங் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்கள் நீங்கலாக இதர ஏழு மாவட்டங்களில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்புச் சந்தை மற்றும் ஷா ஆலமில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான பிரத்தியோக வேலை வாய்ப்புச் சந்தையின் வாயிலாக 982 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றனர்.








