கோல சிலாங்கூர், நவ. 9- வடகிழக்கு பருவமழையின் போது சிலாங்கூரிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது என்று உள்கட்டமைப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
அணைக்கட்டுகளில் உள்ள நீர் இருப்பை குறைப்பதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
நாம் வழக்கமாக பத்து விழுக்காடு என்ற அளவில் நீரின் கொள்ளளவை குறைத்து வருகிறோம். அதாவது நீர்த்தேக்கத்தில் 100 விழுக்காடு நீர் இருந்தால் மழை நீருக்கு இடமளிக்கும் வகையில் அதனை 90 விழுக்காடாக குறைத்து வருகிறோம்.
ஆறுகளில் நீர் பெருக்கெடுப்பதை தவிர்க்கும் விதமாக இந்த பத்து விழுக்காட்டு நீரையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகிறோம். இந்நடவடிக்கையின் வாயிலாக நீர்த்தேக்கங்களில் இதுவரை எந்த பிரச்சினையும் எழவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பெஸ்தாரி ஜெயாவிலுள்ள ஜாலான் ரந்தாவ் பஞ்சாங்கில் நேற்று நடைபெற்ற மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்ட ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள நீர் இறைப்பு பம்ப்களின் செயலாக்கம் குறித்து வினவப்பட்ட போது, அப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு வடிகால்கள் மற்றும் கால்வாய்களை தரம் உயர்த்தும் பணியை ஷா ஆலம் மாநகர் மன்றமும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையும் மேற்கொண்டு வருகின்றன என்றார்.
இந்த பணி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய தெனாகா நேஷனல் நிறுவனம் மின்சார விநியோகத்தை வழங்கி வருகிறது என்றார் அவர்.








