ஷா ஆலம், நவ. 5- மழைகாலம் என பரவலாக அறியப்படும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலக்கட்டத்தில் கடுமையான மழையை உட்படுத்திய ஐந்து முதல் ஏழு சம்பவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
இம்மாதம் தொடங்கி வரும் டிசம்பர் வரை கிளந்தான் திரங்கானு, பகாங் ஜோகூர், சரவா மற்றும் சபாவில் கன மழை பெய்யும் என கணிக்கப்படுவதாக அத்துறை தெரிவித்தது.
அடுத்தாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை பகாங், ஜோகூர் சரவா மற்றும் சபாவில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன மழை மற்றும் கடல் பெருக்கோடு புயல் காற்றும் ஏக காலத்தில் வீசம் பட்சத்தில் வெள்ளம் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்ர் முகமது ஹிஷாம் முகமது அனிப் முன்னதாக கூறியிருந்தார்.
வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழையின் கடைசிக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதியில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும்.
இதன் காரணமாக கடுமையான வெப்பமும் வறட்சியும் ஏற்பட்டு வெப்ப அலை ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் உருவாக்கும் என அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்த பருவமழை காலத்தின் பொது பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும் அதேவேளையில் வானிலை ஆய்வுத் துறையின் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








