கோலாலம்பூர், நவ.5- குவைத் விமானப் படையிடமிருந்து போர் விமானங்களை வாங்குவதில் மலேசியா கொண்டுள்ள ஆர்வம் தொடர்பான தொடர் பேச்சு வார்த்தைக்காக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் மலேசியாவுக்கான குவைத் தூதர் ரஷீட் முகமது அல்-சலேவை நேற்று சந்தித்தார்.
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் குவைத்திற்கு தாம் மேற்கொண்ட பணி நிமித்தப் பயணத்தின் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பு அமைவதாக காலிட் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
நான் குவைத்தில் இருந்த போது அந்நாட்டின் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கும் துணைப் பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினேன்.
குவைத் விமானப் படைக்குச் சொந்தமான F/A-18C/D லெகசி ஹார்னெட் போர் விமானங்களை இயக்குவதற்கு பொறுப்பான படைப் பிரிவை கொண்ட அகமது அல்-ஜாபர் விமான தளத்தையும் நான் பார்வையிட்டேன் என்று அவர் கூறினார்.
இந்த போர் விமானங்களை வாங்குவது அரச மலேசிய ஆகாயப் படையின் திறனையும் தயார் நிலையையும் அதிகரிக்கும் என்று காலிட் தெரிவித்தார்.








