கோலாலம்பூர், நவ 3- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் கிள்ளான்
பள்ளத்தாக்கு நோக்கி வரும் தடங்களில் இன்று காலை போக்குவரத்து
கட்டுப்பாட்டில் இருந்தது.
கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட தீபாவளியை முன்னிட்டு
சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் இல்லம் திரும்பத்
தொடங்கியுள்ளால் இன்று பிற்பகல் தொடங்கி நெடுஞ்சாலைகளில்
போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை வழக்கத்திற்கு
மாறான நெரிசல் காணப்படவில்லை என்று மலேசிய நெடுஞ்சாலை
வாரியத்தின் (எல்.எல்.எம்.) பேச்சாளர் ஒருவர் கூறினார். எனினும், வடக்கு-
தெற்கு நெடுஞ்சாலையின் 256.6வது கிலோ மீட்டரில் செனவாங் மற்றும்
போர்ட்டிக்சன் இடையே நிகழ்ந்த விபத்தின் காரணமாக சுமார் 3 கிலோ
மீட்டர் தொலைவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தலைநகர் திரும்பும் வாகனமோட்டிகளின் வசதிக்காக பிளஸ் நிறுவனம்
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏழு விவேகத் தடங்களை இன்று
காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்துள்ளது.
புத்ரா மக்கோத்தா முதல் சவுத்வேலி வரையிலான பகுதி, ரவாங் முதல்
சுங்கை புவாயா வரையிலான பகுதி, சுங்கை முதல் சிலிம் ரிவர்
வரையிலான பகுதி, செனாய் முதல் கூலாய் வரையிலான பகுதியில்
இந்த விவேகத் தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக பிளஸ் நிறுவனப்
பேச்சாளர் ஒருவர் பெர்னாமாவிடம் கூறினார்.
இதனிடையே, கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலை மற்றும் காராக்
நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் தொடங்கி இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








