கூச்சிங், நவ. 3- மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற போது காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட எண்மர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் செமாரியாங் பத்து படகுத் துறையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை படகில் மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்பட்டது.
அந்த எண்மரும் பயணம் செய்த படகை மீட்புக் குழுவினர் நேற்று பிற்பகல் 1.45 மணியவில் கண்டு பிடித்ததாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
அந்த மீன்பிடிப் படகு நேற்று மாலை 5.45 மணியளவில் இழுவைப் படகின் மூலம் செமாரியாங் பத்து படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் சொன்னார்.
அந்த எண்மரும் படகுத் துறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது படகில் ஏற்பட்ட பழுது காரணமாக அவர்கள் வழியில் சிக்கிக் கொண்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பதினேழு முதல் 67 வயது வரையிலான அந்த எண்மரும் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போனது தொடர்பில் தாங்கள் முன்னதாக புகாரைப் பெற்றதாக சரவா மாநில கடல்சார் முகமையின் இயக்குநர் லக்ஸ்மணா பெர்த்தாமா கமால் அரிபின் ஜூசோ கூறினார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கடலுக்கு புறப்பட்ட அவர்கள் வியாழக்கிழமை கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். எனினும், அவர்கள் குறிப்பிட்ட நாளில் திரும்பாததைக் அறிந்த அவர்களின் குடும்பத்தினர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்தனர் என்றார் அவர்.








